Saturday, March 31, 2007

கனிமொழியால் கற்றவை!

============================================

கனிமொழியால் கற்றவை!

இராகம்: ஹிந்தோளம்
தாளம்: ஆதி
பாடியவர்: திரு.T.M.செளந்தரராஜன்
பாடலை எழுதியவர்: கவிஞர் வாலி

பல்லவி

"கற்பனை யென்றாலும் கற்சிலை யென்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ
கற்பனை யென்றாலும் கற்சிலை யென்றாலும்
கந்தனே உனை மறவேன்!

அநுபல்லவி

அற்புதமாகிய அருட் பெரும் பொருளே
அருமறை தேடிடும் கருணையாம் கடலே

கற்பனை யென்றாலும் கற்சிலை யென்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ
கற்பனை யென்றாலும் கற்சிலை யென்றாலும்
கந்தனே உனை மறவேன்!

சரணம்

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின்செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனி மொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண் விழியாலே

கற்பனை யென்றாலும் கற்சிலை யென்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ
கற்பனை யென்றாலும் கற்சிலை யென்றாலும்
கந்தனே உனை மறவேன்!"

-----------------------------------------------------------------------
இன்று பங்குனி உத்திரம்.
அதோடு நிதியாண்டின் முதல் நாள்.
புதுக் கணக்கு எழுதப் பலர் பழநிக்குச் செல்வார்கள்.

எனக்கு எல்லாக் கணக்கும் அவரோடுதான்!
அந்தப் பழநியம்பதியில் தண்டாயுதத்துடன்
நிற்கும் பழநியாண்டவரோடுதான்.

அவர் புகழைப் பாடுவதும் மட்டும்தான்
என்வேலை. என்னுடைய வரவு செலவுகளை
யெல்லாம் அவர் பார்த்துக் கொள்வார்.
இதுவரை அப்படித்தான் நடந்திருக்கிறது!

அதனால் அவர் புகழ் பாடும் இந்தப் பதிவிற்கு
வந்து என் புதுக் கணக்கை மேற்கண்ட
பாடலுடன் துவக்கியுள்ளேன்.

முருகனருள் முன்னிற்கும் இந்தப்பதிவின்
வெளியில் நின்று இதுவரை அவர் புகழ்
பாடும் பாடல்களைப் படித்துக் கொண்டிருந்தவனைக்
கதவைத் திறந்து உள்ளே விட்டு என்னையும்
முருகனின் புகழ் பாட அனுமதித்த
நண்பர் சிபி அவர்களுக்கு என் நன்றி!

அன்புடன்,
SP.VR..சுப்பையா
1.4. 2007

24 comments:

நாமக்கல் சிபி March 31, 2007 4:01 PM  

அருமையான பாடலுடன் வருகை புரிந்துள்ளீர்கள் ஐயா!

மிக்க நன்றி!

எங்களுடன் முருகனருளில் இணைந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!

நல்ல நாள். நல்ல பாடல்!

Subbiah Veerappan March 31, 2007 10:14 PM  

///நாமக்கல்லார் சொல்லியது: அருமையான பாடலுடன் வருகை புரிந்துள்ளீர்கள் ஐயா!
மிக்க நன்றி!
எங்களுடன் முருகனருளில் இணைந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!
நல்ல நாள். நல்ல பாடல்! ///

ஆகா, வாய்ப்பை நல்கியமைக்கு
நான்தான் நன்றி சொல்ல வேண்டும்!
சொல்லிவிட்டேன்

நன்றிக்கு பதில் நன்றி எதற்கு?

ரங்குடு March 31, 2007 10:19 PM  

ஐயா,
அந்த அருமையான பாடல் ஹிந்தோள ராகத்தில்
அமைந்தது அல்ல. சுத்த தன்யாசி ராகத்தில்
அமைந்தது.

நன்றி.

ரங்கா.

குமரன் (Kumaran) March 31, 2007 10:25 PM  

வாங்கையா வாத்தியாரையா வரவேற்க வந்தோமையா...

வருக வருக ஐயா. பங்குனி உத்திரத் திருநாளில் மிக அருமையான பாடலை இட்டு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டீர்கள். மிக்க நன்றி.

குமரன் (Kumaran) March 31, 2007 10:28 PM  

பாடலின் ஒலிவடிவையும் இணைத்திருக்கிறேன் ஐயா. டி.எம்.எஸ்.ஸின் பெயரில் அழுத்தினால் பாடலைக் கேட்கலாம்.

பங்குனி உத்திரத்தின் பெருமைகளை போன வருடம் ஒரு தொடராக மூன்று இடுகைகள் இட்டேன்.

http://koodal1.blogspot.com/2006/04/166-1.html
http://koodal1.blogspot.com/2006/04/167-2.html
http://koodal1.blogspot.com/2006/04/168-3.html

Subbiah Veerappan March 31, 2007 10:37 PM  

///ரங்கா அவர்கள் சொல்லியது:ஐயா,
அந்த அருமையான பாடல் ஹிந்தோள ராகத்தில்
அமைந்தது அல்ல. சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்தது. ///

நான் படித்த புத்தகத்தில் ஹிந்தோளம் என்றுதான் குறிப்பிட்டிருந்தது.தவறாக இருந்தால் மன்னிக்கவும்!

பாடலகளை உணர்வுபூர்வமாக ரசிக்கத் தெரியும்.ராகஙகளைப்ற்றி இனிமேல்தான் தெரிந்து கொள்ள வேண்டும்!

தகவலுக்கு நன்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) March 31, 2007 10:38 PM  

பங்குனி உத்திரம் அன்று புதுக்கணக்கு துவங்கிய சுப்பையா சார்,
வருக வருக!
முருகன் அருள் கவிகள் பல
தருக, தருக!

பங்குனி உத்திரக் காவடிகள் காணக் கண் கோடி வேண்டுமே!
பழனிமலையாண்டவனுக்கு அரோகரா!

கோவி.கண்ணன் April 01, 2007 1:00 AM  

எனது மற்றுமொரு ஆஸ்தான கவிஞர் வாலி எழுதிய லாலியா இது ?

நான் கவியரசர் என்றல்லவா எண்ணி இருந்தேன்.

சொற்சுவையும், பொருட்சுவையும் சம அளவில் கலந்த பஞ்சாம்ருதப் பாடல் இது.

Subbiah Veerappan April 01, 2007 2:34 AM  

//// குமரன் (Kumaran) said...
வாங்கையா வாத்தியாரையா
வரவேற்க வந்தோமையா...///

இதைக் கேட்டாலே
இதயம் குளிருதே (குமரன்) தம்பி!
அடிக்கடி பதிவிட
ஆசை வருகுதே தம்பி!

Subbiah Veerappan April 01, 2007 2:36 AM  

//// குமரன் (Kumaran) said..பாடலின் ஒலிவடிவையும்
இணைத்திருக்கிறேன் ஐயா. டி.எம்.எஸ்.ஸின்
பெயரில் அழுத்தினால் பாடலைக் கேட்கலாம்.
பங்குனி உத்திரத்தின் பெருமைகளை போன
வருடம் ஒரு தொடராக மூன்று இடுகைகள் இட்டேன்.

http://koodal1.blogspot.com/2006/04/166-1.html
http://koodal1.blogspot.com/2006/04/167-2.html
http://koodal1.blogspot.com/2006/04/168-3.html ////

ந்ன்றி கும்ரன்! கேட்டுவிட்டு மீண்டும் வந்து சொல்கிறேன்

Subbiah Veerappan April 01, 2007 2:39 AM  

//// RAVI SHANKAR (KRS) said...
பங்குனி உத்திரக் காவடிகள் காணக் கண் கோடி வேண்டுமே!
பழனிமலையாண்டவனுக்கு அரோகரா!////

இன்று உள்ளே வருபவர்களில்,
"ஆறுமுகனுக்கு அரோகரா" என்று முதலில்
சொல்பவரகள் யாராக இருக்ககூடும் என்று
பார்ப்பதற்காகக் காத்திருந்தேன்.
அது நீங்கள் தான்!
வருகின்ற சர்வஜித் ஆண்டு உங்களுக்கு
வளமான் வாழ்வைத் தரும்!
வாழக! வளர்க!

Subbiah Veerappan April 01, 2007 2:42 AM  

///// கோவி.கண்ணன் said..சொற்சுவையும், பொருட்சுவையும்
சம அளவில் கலந்த பஞ்சாம்ருதப் பாடல் இது.////

என்ன கண்ணன் எனக்கு எதையும் நினைத்தால்
உடனே செய்ய வேண்டும்!
பஞ்சாமிர்தத்தை ஞாபகப்படுத்தி விட்டீர்களே?
பஞ்சாமிதத்திற்கு இப்பொழுது எங்கே போவது?

நாமக்கல் சிபி April 01, 2007 2:58 AM  

//பஞ்சாமிர்தத்தை ஞாபகப்படுத்தி விட்டீர்களே?
பஞ்சாமிதத்திற்கு இப்பொழுது எங்கே போவது?
//

ஐயா! வேண்டுமெனில் சொல்லுங்கள்!

இப்பொழுதே மருதமலை சென்று வாங்கி வருகிறேன்!

மாலைதான் செல்லத் திட்டமிட்டிருக்கிறேன்!

பழனியிலிருந்துதான் வேண்டுமெனில் இரண்டு நாட்களில் கிடைக்க ஆவண செய்கிறேன்!

Subbiah Veerappan April 01, 2007 3:32 AM  

///நாமக்கல்லார் சொல்லியது:
ஐயா! வேண்டுமெனில் சொல்லுங்கள்!

இப்பொழுதே மருதமலை சென்று வாங்கி வருகிறேன்!
மாலைதான் செல்லத் திட்டமிட்டிருக்கிறேன்!
பழனியிலிருந்துதான் வேண்டுமெனில் இரண்டு நாட்களில் கிடைக்க ஆவண செய்கிறேன்!////

அடடா, நீங்கள் அன்பு, அக்கறையுடன் சொல்லியதே பஞ்சாமிரத்ம் சாப்பிட்ட மாதிரியுள்ளது

அந்த பஞ்சாமிர்தம் நாக்கிற்கு மட்டும்தான் சுவைகூட்டும்.
ஆனால் முருகன் பாட்ல்களும், அடியார்களின் பாராட்டும் மனதிற்கல்லவா அருஞ்சுவையைத் தருகிறன்றன!

உங்களுக்கெதற்கு வீண் சிரமம். தேவையென்றால் உங்களிடம் சொல்லாமல் நான் யாரிடம் சொல்லப் போகிறேன்?

நாமக்கல் சிபி April 01, 2007 3:37 AM  

//அந்த பஞ்சாமிர்தம் நாக்கிற்கு மட்டும்தான் சுவைகூட்டும்.
ஆனால் முருகன் பாட்ல்களும், அடியார்களின் பாராட்டும் மனதிற்கல்லவா அருஞ்சுவையைத் தருகிறன்றன!
//

உண்மைதான் ஐயா!

தி. ரா. ச.(T.R.C.) April 01, 2007 4:41 AM  

அட சுப்பையா இல்லாத முருகனருளா?
அருளே அங்கிருந்துதானே வருகிறது.
மிக நல்ல பாடலுடன் பங்குனி உத்திரத்தில் உள்ளே வந்த திரு. சுப்பையாவே இன்னும் பல பாடல்களைத்தருக.வருகலாமோ ஐயா நான் உந்தன் சந்நிதிக்கு என்ற பாடல் தெரியுமல்ல உங்களுக்கு.

நாமக்கல் சிபி April 01, 2007 5:40 AM  

//அட சுப்பையா இல்லாத முருகனருளா?
அருளே அங்கிருந்துதானே வருகிறது//

அதானே! அப்பனுக்கே பாடம் சொன்னவன் அல்லவா அந்த சுப்பைய்யா!

Subbiah Veerappan April 01, 2007 8:08 AM  

//// தி.ரா.ச அவர்கள் சொல்லியது: மிக நல்ல பாடலுடன்
பங்குனி உத்திரத்தில் உள்ளே வந்த திரு. சுப்பையாவே
இன்னும் பல பாடல்களைத் தருக!/////

அய்யா! உங்கள் ஆசிகள் பலிக்கட்டும்!
நிறையப் பாடல்களை நிச்சயம் பதிவிடுகிறேன்
எங்கள் பகுதியில் ஏராளமான கவிஞர்கள்
அனைவரும் பேராசிரியர்கள்:முருக பக்தர்கள்.
அவர்கள் எழுதிய மனதை மயக்கும் பாடல்கள்
நிறைய உள்ளன. ஒவ்வொன்றாகப் பதிவிடுகிறேன்!

Subbiah Veerappan April 01, 2007 8:10 AM  

/////நாமக்கல் சிபி said... //அட சுப்பையா இல்லாத முருகனருளா?
அருளே அங்கிருந்துதானே வருகிறது//
அதானே! அப்பனுக்கே பாடம் சொன்னவன் அல்லவா
அந்த சுப்பைய்யா!////

அடடா! சுவாமிமலையில் உள்ள சுப்பையாவை
அல்லவா சொல்கிறீர்கள்!
சுவாமிமலை நாதனை நினைத்து
பித்துக்குளி முருகதாஸ் அவர்கள்
பாடிய அற்புதமான பாடல் ஒன்று
இருக்கிறது சிபி!

"நாடறியும் நூறுமலை
நானறிவேன் சுவாமி மலை!"

என்று துவங்கும் பாடல் அது
தேடிப் பார்க்கிறேன் சிபி!

வல்லிசிம்ஹன் April 01, 2007 2:18 PM  

நல்லதொரு நாளில் நல்லதொரு பாடல். மனதில் ஊறிப்போன வரிகள்.
முருகனே வந்துவிடுவான் என்று த்ன்றும்.
காதுகளுக்கும் கண்களுக்கும் விருட்ன்ஹு கொடுத்த ஐய்யாவுக்கு நன்றி.

G.Ragavan April 02, 2007 1:32 PM  

இந்தப் பாடலுக்குப் பின்னால் ஒரு சுவையான நிகழ்ச்சி உண்டு. திருச்சி ரயில்வே நிலையத்தில் முதல்வகுப்பில் டி.எம்.எஸ் உட்கார்ந்திருந்தாராம். அப்பொழுது சிறுவயது வாலி இந்தக் கவிதையைக் குடுத்தாராம். படித்த பொழுதிலேயே மெட்டெடுத்து விட்டதாம் டி.எம்.எஸ்க்கு. அந்தப் பாடலை இசையமைத்து அவரே பாடியிருக்கிறார். இப்படி வாலிக்கு வாழ்வளித்துக் காத்தானாம் முருகன். இதை அவரது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் வாலி.

மிகவும் அருமையான பாடல் இது. அது சொல்லும் கருத்துகள் எக்கச்சக்கம். கேட்கவும் படிக்கவும் நினைக்கவும் இனியதொரு பாடலை நினைவூட்டியமைக்கு நன்றி குமரன்.

நாமக்கல் சிபி April 02, 2007 1:56 PM  

//இதைக் கேட்டாலே
இதயம் குளிருதே (குமரன்) தம்பி!
அடிக்கடி பதிவிட
ஆசை வருகுதே தம்பி!
//

ஐயா!

தங்களை அழைத்ததே அதற்குத்தானே!

VSK April 02, 2007 2:36 PM  

உத்தரத் திருநாளில் அருமையானதொரு பாடலை அளித்து உள்ளம் குளிர்வித்தீர்கள்!

தென்பழனி நாதனுக்கு ஹரஹரோஹரா!
ஏறுமயில் வேலனுக்கு ஹரஹரோஹரா!
ஹரஹரோஹரா முருகா ஹரஹரோஹரா!
ஹரஹரோஹரா ஷண்முகா ஹரஹரோஹரா!

நாமக்கல் சிபி April 02, 2007 2:54 PM  

தென்பழனி நாதனுக்கு ஹரஹரோஹரா!
ஏறுமயில் வேலனுக்கு ஹரஹரோஹரா!
ஹரஹரோஹரா முருகா ஹரஹரோஹரா!
ஹரஹரோஹரா ஷண்முகா ஹரஹரோஹரா!

எல்லோரும் சேர்ந்து சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP