Saturday, April 05, 2008

முருகா முருகா என்றால்

செந்தில் வாழ் நகர் தேவாதி தேவன் முருகனுக்கு அரோகரா



நாளை கிருத்திகைத் திருநாள் . வழக்கம்போல் பதிவு. முருகனடி பணியும் வாய்ப்பு.அருமையான சாவேரி ராகத்தில் முருகனின் இரக்க குணத்தை புகழ்ந்து பாடிய ஒருபாடல். பாடலை எழுதியவர் திரு. பெரியசாமி தூரன் அவர்கள்.
முருகா முருகா என்று கூறினாலே உந்தன் உள்ளம் உருகிவிடும் நான் இப்படி உருகி அழைத்தால் பரிவோடு வரமாட்டாயா? வராமல் எங்கே போய்விடுவாய். ஒருதரம் உன்னிடம் என் குறையைச் சொன்னாலும் அல்லது உன்னுடைய பாதத்தை நினந்தாலும் அருள் தரும் கந்தா நான் இப்படி அல்லும் பகலும் உன் நாமத்தை சொல்லும்போது வரமலிருக்கலாமா.
ஒருவேளை, அறியாமல் நான் செய்த பிழைக்காக என்னை நீ வெறுக்கின்றாயோ அதனால்தான் அழகே உருவான ஐய்யா உனக்கு கோபம் வந்ததோ. எப்படியிருந்தாலும் சிறியவனான நான் செய்த பிழையைப் பொறுத்து அருள்செய்யப்பா வளமை பொருந்திய தெருச்செந்தூர் நகரத்தின் அதிபதியே தேவர்களுக்கெல்லாம் தேவனே.

இப்படி தனித்தமிழில் இனிமையாகவும், உள்ளம் உருகிப் பாடினால் கந்தன் வராமலா இருப்பான் இனிபாடலை பாருங்கள். கந்தன் வராவிட்டாலும் குமரனும்,குமரனின் மாமவும்(ராகவன்) வருவார்களா பார்ப்போம்?



ராகம்: சாவேரி தாளம்:ஆதி
பல்லவி
முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்
வருவாய் வருவாய் என்றால் பரிவோடு வாரயோ...(முருகா முருகா என்றால்)


அனுபல்லவி

ஒருகால் முறைசெய்தாலும் நின்பதம் நினைந்தாலும்

அருளே தந்திடும் கந்தா அல்லும் பகலும் நான்....(முருகா முருகா என்றால்)

சரணம்
தெரியாது நான் செய்த பிழையால் நீ வெறுத்தாயோ
அன்பேவடிவம் கொண்ட அழகா நீ சினந்தாயோ
சிறியேன் என் குறையெல்லாம் பொறுத்தே அருள் செய்வாய்
செந்தில் மாநகர் வாழும் தேவாதி தேவனே.....(முருகா முருகா என்றால்)





-

-/<" திருமதி. மும்பைஜெயச்ரீ குரலில் இங்கே கேளுங்கள் ">

8 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) April 03, 2008 3:46 PM  

//தெரியாது நான் செய்த பிழையால் நீ வெறுத்தாயோ//

வெறுத்தேன் இல்லை! வெறும் தேன்!

//அன்பேவடிவம் கொண்ட அழகா நீ சினந்தாயோ//

சினந்தேன் இல்லை! சின்ன அம் தேன்!

//சிறியேன் என் குறையெல்லாம் பொறுத்தே அருள் செய்வாய்//

குறையினைக் குறைத்தேன்
நிறையினை நிறைத்தேன்!

//செந்தில் மாநகர் வாழும் தேவாதி தேவனே//

செந்திலாண்டவனுக்கு அரகரோகரா!

வல்லிசிம்ஹன் April 04, 2008 12:41 PM  

இப்படியெல்லாம் ரவி சார் எழுதிடுவார். அப்புறம் நம்ம பின்னூட்டத்துகு எங்க போறது;)

முருகன் அழகைப் போலவே பாட்டும் அழகு. அதைப் பாடினவங்க குரலும் பாவமும் அழகு.
நன்றாக இருந்தது தி.ரா.ச சார்.

தி. ரா. ச.(T.R.C.) April 06, 2008 2:13 PM  

@கேஆர்ஸ் வாங்க. பங்களூர் பயண அவசரத்திலும் வந்ததற்கு நன்றி. குறைகளை நிறையாக்குபவந்தான் முருகன்.

தி. ரா. ச.(T.R.C.) April 06, 2008 2:19 PM  

@வல்லியம்மா கேஆர்ஸ்க்கு என்ன. வார்த்தை சித்தர் அவர். நமக்கு(எனக்கு) அவ்வளவு போராது.ஏதோ ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை.

. பாடியவர் எனக்குத் தெரிந்தவர் தான். ஸிண்டிகேட் வங்கியில் அதிகாரியாக இருந்து அதை விடுத்து இப்போது முழுநேர பணியாக சங்கீதத்தில் கவன்ம் செலுத்துகிறார்

இலவசக்கொத்தனார் May 01, 2008 5:06 PM  

சூப்பர் பாட்டு.

//ஒருகால் முறைசெய்தாலும் //

உரை செய்தாலும் எனக் கேட்டு வந்தேன். உரை / உறை எது சரி எனப் புரியவில்லை. அல்லது முறைதான் சரியா?

உரை - பேச்சு - தேவையில்லாத பேச்சு
உறை - காரமான வசவு

இப்படி இருக்கலாமா?இந்த வரிக்குப் பொருள் தாருங்களேன்.

குமரன் (Kumaran) May 01, 2008 5:12 PM  

அருமையான பாடலை இரண்டு மூன்று பேர் பாடக் கொடுத்ததற்கு நன்றிகள் தி.ரா.ச.

ஏன் இந்த இடுகை இது வரை தமிழ்மணத்திற்கு அனுப்பப்படாமல் இருந்தது? இன்று நான் ஒரு இடுகை/பாடலை இட்டுவிட்டுத் தமிழ்மணத்திற்கு அனுப்பும் போது இதுவும் சென்றது.

G.Ragavan May 03, 2008 4:55 AM  

// //தெரியாது நான் செய்த பிழையால் நீ வெறுத்தாயோ//

வெறுத்தேன் இல்லை! வெறும் தேன்! //

தேனின் சுவை இனிப்பு. அந்த இனிப்பும் இல்லாத வெறும் தேன் என்கின்றீர்களா ரவி ;)

G.Ragavan May 03, 2008 4:57 AM  

// இலவசக்கொத்தனார் said...

சூப்பர் பாட்டு.

//ஒருகால் முறைசெய்தாலும் //

உரை செய்தாலும் எனக் கேட்டு வந்தேன். உரை / உறை எது சரி எனப் புரியவில்லை. அல்லது முறைதான் சரியா?

உரை - பேச்சு - தேவையில்லாத பேச்சு
உறை - காரமான வசவு

இப்படி இருக்கலாமா?இந்த வரிக்குப் பொருள் தாருங்களேன். //

கொத்ஸ், முறைதான் இங்கு சரி. முறை சொல்வது என்பதற்குப் புகார் சொல்வது என்று பொருள். முறையீடு என்று இன்றும் சொல்வார்களே. முருகனிடம் சென்று முறையிட்டால் துன்பங்கள் நம்மைக் காண விடாமல் திரை செய்வான் என்று பொருள் கொள்ள வேண்டும்.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP