Saturday, February 07, 2009

தைப்பூசம்: குத்துப் பாட்டு=கிளிக் கண்ணி+காவடிச் சிந்து!

அன்பர்கள் அனைவர்க்கும் தைப்பூச வாழ்த்துக்கள்! வடலூர் வள்ளல்பிரான் இராமலிங்கப் பெருமகனுக்குத் தைப்பூச ஜோதி தரிசனம்! பழனியில் பாத யாத்திரை! மலேசிய பத்துமலை மற்றும் நாகை-சிக்கலில் திருவிழா! இப்படிப் பல சிறப்புகள்!
தைப்பூசம்-ன்னா என்னாங்க? எதுக்குத் தைப்பூசம்?

முருகன் அன்னையிடம் வேல் வாங்கிய நாள் தான் தைப்பூசம்!
தாராகாசுரனை மலையில் வேலெறிந்து வீழ்த்திய நாள் என்றும் சிலர் சொல்வார்கள்!
தைப்பூசமான இன்று (Feb-8-2009) மேல் மருவத்தூரிலும் பெருவிழா! மதுரையம்பதியில் அன்னை மீனாட்சியும் அப்பன் சொக்கனும், வண்டியூர் மாரியம்மன் குளத்துக்கு வந்து தெப்பம் காண்பார்கள்! அது வரை மதுரை ஆலயத்தில் பூசைகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்-ன்னு கேள்விப்பட்டிருக்கேன்!

இன்னிக்கு-ன்னு பார்த்து, ஒப்பிலியப்பன் கோயில் குடமுழுக்கும் (சம்ப்ரோக்ஷணம்) நடைபெறுகிறது இன்னொரு சிறப்பு! இதோ சுட்டி!

முருகனருள் வலைப்பூவில், இந்தச் சிறப்பு நாளில், ஒரு சிறப்புப் பாட்டைப் பார்க்கலாமா? கிளிக் கண்ணி+காவடிச் சிந்து! = வள்ளிக் கணவன் பேரை, வழிப் போக்கர் சொன்னாலும்-என்ற பாட்டு!



கண்ணி என்றால் என்ன? அது என்ன கிளிக் கண்ணி? கிளியைப் போல் உருண்டையா உருண்டையா கண் உள்ள பெண் தான் கண்ணியா? :)

ஹிஹி! கண்ணி-ன்னா ஒரு வித மாலை! பெரிய மாலை இல்லை! குட்டி குட்டியா, சிறுசா தொடுக்கப்படும் மாலை!
வளைவாகத் தொடுத்து, இறைவனின் கைகளில் வளை போலவும், கால்களில் சிலம்பு போலவும், தலையில் தலைமாலை போலவும் அலங்கரிப்பார்கள்!
பொதுவாகப் பெருமாள் கோயில்களில் இந்தக் கண்ணிகள் வளை வளையாகத் தொடுத்து, திருவடிகளில் அணிவிக்கப்படும்!

அது பூமாலை! அதே போல ஒரு பாமாலை!
கண்ணி = இரண்டு இரண்டு வரிகளாகத் தொடுக்கப்படும் சின்னச் சின்ன பாட்டு! மிகவும் எளிமையாக கிராமிய மெட்டில் இருக்கும்! அதனாலேயே எனக்கும் ரொம்பப் பிடிக்கும்! பராபரக் கண்ணி கேள்விப்பட்டு இருப்பீங்களே? யார் எழுதியது சொல்லுங்க பார்ப்போம்!

இந்தப் பாடல் கிளிக் கண்ணி! கிளியை நோக்கி முருகனின் காதலி பாடுகிறாள்!
எழுதியவர் பெயர் தெரியலை (அனானி)! ஆனால் அருமையா இருக்கு!
கோடிச் செம்பொன் போனாலென்ன? - கிளியே, அவன் குறுநகை போதுமடி! கிளியே, அவன் குறுநகை போதுமடி!

அந்தக் கண்ணியை இசையோடு பாட முடியுமா? அதுவும் காவடிச் சிந்து மெட்டில்?
* ஆட்டத்தின் போது களைப்பு தெரியாமல் இருக்க துள்ளலா பாடுவது காவடிச் சிந்து! நாலு நாலு வரியா வரும்!
* ஆட்டமாய் இல்லாமல், அமைதியான கிராமிய இசையாய் பாடுவது கண்ணி! இரண்டு இரண்டு வரியாய் வரும்!

அந்த இரண்டு வரியை, நடுவில் உடைத்து, நாலு வரியாக்கி, கண்ணியைக் காவடிச் சிந்து மெட்டில் பாடுறாங்க! கேட்டு கிட்டே படிங்க!
காவடிச் சிந்தின் குத்தாட்டத்தைக் கொஞ்சம் மட்டுப்படுத்தி, கண்ணிப் பாட்டின் மெட்டிலே, இதோ காவடிச் சிந்து மெட்டு!
அருணா சாய்ராம்: (My choice for this song)

நித்ய ஸ்ரீ


* சுதா ரகுநாதன் பாடுவது!
* குன்னக்குடி வைத்யநாதன் - வயலின்
* வீணை இசையில்!


வள்ளிக் கணவன் பேரை,
வழிப் போக்கர் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி - கிளியே,
ஊனும் உருகுதடி!


மாலை வடி வேலவர்க்கு, வரிசையாய் நானெழுதும்
ஓலைக் கிறுக்காச்சுதே - கிளியே, உள்ளமும் கிறுக்காச்சுதே!


காட்டுக் கொடி படர்ந்த, கருவூரின் காட்டுக்குள்ளே
விட்டுப் பிரிந்தானடி - கிளியே, வேலன் என்னும் பேரோனடி!


கூடிக் குலாவி மெத்த, குகனோடு வாழ்ந்த தெல்லாம்
வேடிக்கை அல்லவடி - கிளியே, வெகு நாளின் பந்தமடி!


மாடுமனை போனாலென்ன? மக்கள் சுற்றம் போனாலென்ன?
கோடிச் செம்பொன் போனாலென்ன? - கிளியே, குறுநகை போதுமடி!

எங்கும் நிறைந் திருப்போன்! "எட்டியும் எட்டா திருப்போன்"!
குங்கும வர்ணனடி - கிளியே, குமரப் பெருமானடி!


பாட்டு எப்படி இருந்திச்சி மக்கா?
நல்ல பாட்டை யாருக்காச்சும் டெடிகேட் செய்யறது பண்பலை வானொலியில் வழக்கமாப் போச்சு! இந்தப் பாட்டை நம் கூடல் குமரனுக்கு டெடிகேட் செய்கிறேன்!
குமரப் பெருமானடி! கிளியே, குமரப் பதிவனடி! கிளியே, குமரப் பதிவனடி! :))

தைப்பூச முருகனுக்கு அரகரோகரா!!! பத்துமலை பழனிமலை முருகனுக்கு அரகரோகரா!!!

12 comments:

தமிழ் February 07, 2009 10:26 PM  

அருமையான வரிகள்
விளக்கம்

வள்ளலார் பாடிய கண்ணிகள் தான்
எத்தனை

பாங்கிமார் கண்ணி, வெண்ணிலாக் கண்ணி, பேரன்புக் கண்ணி

குமரன் (Kumaran) February 08, 2009 9:25 AM  

//வண்டியூர் மாரியம்மன் குளத்துக்கு வந்து தெப்பம் காண்பார்கள்! அது வரை மதுரை ஆலயத்தில் பூசைகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்-ன்னு கேள்விப்பட்டிருக்கேன்!
//

மதுரையில் கோவிலுக்குள்ளேயே ஊருலா திருமேனிப் புறப்பாடு நடக்கும் போதும் மூலத்தானத்தில் திரை இடப்பட்டுவிடும்.

பராபரக் கண்ணி நீங்கள் எழுதுனதா? நான் படிச்சதா நினைவில்லையே. :-) சுட்டி குடுங்க. :-)

குமரன் (Kumaran) February 08, 2009 9:38 AM  

பாட்டை ஒரு பத்து முறையாவது கேட்டுவிட்டு வருகிறேன். :-)

கிரி February 08, 2009 9:51 AM  

//அன்பர்கள் அனைவர்க்கும் தைப்பூச வாழ்த்துக்கள்//

உங்களுக்கும் வாழ்த்துக்கள் KRS

//தைப்பூசம்-ன்னா என்னாங்க? எதுக்குத் தைப்பூசம்?//

தைப்பூசம் கொண்டாடுவேன் இன்று தான் அதன் அர்த்தம் தெரிந்தது (மன்னிக்கவும்) நன்றி

சிங்கையில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்பட்டது விரைவில் அது பற்றி படங்களுடன் பதிவெழுதுகிறேன்..சும்மா பட்டய கிளப்பிட்டாங்க...மிரண்டு போயிட்டேன்

Kannabiran, Ravi Shankar (KRS) February 08, 2009 10:39 AM  

//திகழ்மிளிர் said...
அருமையான வரிகள்
விளக்கம்//

நன்றி திகழ்மிளிர்
பாருங்க அனானியின் வரிகளில் தான் எத்தனை உயிரோட்டமான கிராமியக் காதல்!

//வள்ளலார் பாடிய கண்ணிகள் தான்
எத்தனை
பாங்கிமார் கண்ணி, வெண்ணிலாக் கண்ணி, பேரன்புக் கண்ணி//

ஆமாம்! கண்ணி வகையான பாட்டில், நிறைய கருத்துக்களை பளேர்-ன்னு சொல்ல முடியும் போல! வள்ளலாரும், தாயுமானவரும் கண்ணிப் பாடல் நிபுணர்கள்!

வள்ளலார் பதிவு ஒன்னு பந்தலில் போடணும் தைப்பூசத்துக்கு! நேரம் தான் இல்லை :(

Kannabiran, Ravi Shankar (KRS) February 08, 2009 10:44 AM  

//குமரன் (Kumaran) said...
மதுரையில் கோவிலுக்குள்ளேயே ஊருலா திருமேனிப் புறப்பாடு நடக்கும் போதும் மூலத்தானத்தில் திரை இடப்பட்டுவிடும்//

உம்...அப்போ-ன்னு வரும் பக்தர்கள் தரிசனம் பண்ண முடியாது இல்லையா குமரன்? அதுவும் வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள்!
உள்ளுக்குள்ளேயே நடக்கும் புறப்பாடு-ன்னா கொஞ்சம் சீக்கிரம் முடிஞ்சிரும்! வண்டியூருக்கு போய் வரதுன்னா நேரம் ஆகுமே! அரை நாள் மூடி இருந்தா.....பாவம் பக்தர்கள்!

//பராபரக் கண்ணி நீங்கள் எழுதுனதா?//

கண்ணி-ன்னு தானே சொன்னேன்? கன்னி-ன்னு சொல்லலையே! அப்புறம் ஏன் இந்தச் சந்தேகம்? :)

//நான் படிச்சதா நினைவில்லையே. :-) சுட்டி குடுங்க. :-)//

சுட்டி எல்லாம் பாபா தான் கொடுப்பாரு!
தாயும் ஆனவருக்கே சுட்டியா? அரோகரா! :)

Kannabiran, Ravi Shankar (KRS) February 08, 2009 10:45 AM  

//குமரன் (Kumaran) said...
பாட்டை ஒரு பத்து முறையாவது கேட்டுவிட்டு வருகிறேன். :-)
//

வாங்க வாங்க! பைய வாங்க! நானும் கேட்டுக்கிட்டே தான் டைப்பறேன்! குன்னக்குடியின் கிளிக் கண்ணி கூட நல்லாத் தான் இருக்கு! துள்ளலோடு!

Kannabiran, Ravi Shankar (KRS) February 08, 2009 9:04 PM  

//கிரி said...
தைப்பூசம் கொண்டாடுவேன் இன்று தான் அதன் அர்த்தம் தெரிந்தது (மன்னிக்கவும்) நன்றி//

நோ நோ!
மன்னிக்க எல்லாம் முடியாது! :)

இதுல என்ன இருக்கு கிரி! அறிந்து செய்தால் இன்னும் ஈடுபாடு! அவ்ளோ தானே?

//சிங்கையில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்பட்டது விரைவில் அது பற்றி படங்களுடன் பதிவெழுதுகிறேன்//

சூப்பர்! இங்க வந்து அப்படியே ஒரு சுட்டி கொடுத்துடுங்க!

//சும்மா பட்டய கிளப்பிட்டாங்க...மிரண்டு போயிட்டேன்//

ஹிஹி! பத்து மலையா? இல்லை சிங்கையிலேயேவா?

தி. ரா. ச.(T.R.C.) February 09, 2009 1:09 AM  

கேஆர்ஸ் வழக்கம் போல பிச்சுபிட்டீங்க. அருணாசயிரம் பாடும் கிளிக்கண்ணி அண்ணமலை ரெட்டியார் போட்ட கவடிச் சிந்து.ஸ்வாமிமலையில் முருகனுக்கு விபூதி அபிஷேகம் ஆனவுடன் குருக்கள் முருகனுக்கு கண்களையும் புருவத்தயும் வாயையும் கையினால் சரி செய்தவுடன் முருகனின் முகத்தில் ஒரு புன்னகை மிளிருமே அதைப் பார்த்துதான்"குருநகை போதுமடி"" என்று பாடினார்களோ?

கிரி February 09, 2009 3:38 AM  

//ஹிஹி! பத்து மலையா? இல்லை சிங்கையிலேயேவா?//

சிங்கை ல தான்

சிங்கைலையே இப்படின்னா..பத்து மலை எல்லாம் கேட்கவே வேண்டாம்

Kannabiran, Ravi Shankar (KRS) February 09, 2009 5:46 PM  

//தி. ரா. ச.(T.R.C.) said...
கேஆர்ஸ் வழக்கம் போல பிச்சுபிட்டீங்க.//

நன்றி திராச ஐயா! :)

//அருணாசயிரம் பாடும் கிளிக்கண்ணி அண்ணமலை ரெட்டியார் போட்ட கவடிச் சிந்து//

ஓ...அண்ணாமலை ரெட்டியார் எழுதின பாட்டு தானா இது? சொன்னமைக்கு நன்றி! பதிவில் மாத்திடறேன்!

//ஸ்வாமிமலையில் முருகனுக்கு விபூதி அபிஷேகம் ஆனவுடன் குருக்கள் முருகனுக்கு கண்களையும் புருவத்தயும் வாயையும் கையினால் சரி செய்தவுடன் முருகனின் முகத்தில் ஒரு புன்னகை மிளிருமே அதைப் பார்த்துதான்"குருநகை போதுமடி"" என்று பாடினார்களோ?//

ஒரு மினி சுவாமி மலைப் பதிவைப் பின்னூட்டத்தில் போட்டுட்டீங்க! :)
இந்த முறை திருக்கடையூர் பயணம் முடிச்சி வரும் வழியில், நீங்கள் சொன்ன அதே விபூதிக் காப்பை, புன்னகையைப் பார்த்தேன்...பார்த்தேன்...பாத்துக்கிட்டே இருக்கேன்....
I just love saami malai murugan...hez so darling! :)))

Kavinaya February 10, 2009 6:06 PM  

ரொம்ப அழகா இருக்கு பாட்டு. பகிர்ந்தமைக்கு நன்றிகள் கண்ணா.

//ஸ்வாமிமலையில் முருகனுக்கு விபூதி அபிஷேகம் ஆனவுடன் குருக்கள் முருகனுக்கு கண்களையும் புருவத்தயும் வாயையும் கையினால் சரி செய்தவுடன் முருகனின் முகத்தில் ஒரு புன்னகை மிளிருமே அதைப் பார்த்துதான்"குறுநகை போதுமடி"" என்று பாடினார்களோ?//

:)) அனுபவித்து சொன்னதை ரசித்தேன் தி.ரா.ச. ஐயா.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP