Saturday, May 09, 2009

ஷண்முக நாயகன் தோற்றம்!



அகத்திய முனிவர் அருளிய இந்தப் பாடல்கள் மிகவும் சந்த நயத்துடன் கூடியது. சிறுவயதில் இருந்தே அன்னையாரால் அறிமுகம் செய்யப்பட்டு இன்று வரை பாடுவதற்கு அடியேன் மிகவும் விரும்பும் பாடல்கள் இவை. அண்மையில் இப்பாடல்களை திரு. வெ. சுப்பிரமணியன் அவர்கள் மின் தமிழ் குழுமத்தில் இட்டார்கள். அதனை இங்கே முருகனடியார்கள் பாடிப் பயன் பெறும் வகையில் பதிகின்றேன்.

ஷண்முக நாயகன் தோன்றிடுவான் -சிவ
ஸத்குரு நாயகன் தோன்றிடுவான்
கண்களினால் கண்டு போற்றிடலாம்-கொடும்
காலத்தைக் காலனை மாற்றிடலாம் (ஷண்முக) (1)

ஆனந்த மாமலர்ச் சோலையிலே-மன
ஆட்டம் அடங்கிய வேளையிலே
ஞானம் தரும் தென்றல் காற்றினிலே-எழும்
நாம சங்கீர்த்தன ஊற்றினிலே (ஷண்முக) (2)

பக்குவமாம் தினைக் காட்டினிலே- அவன்
பக்தர் நுழைந்திடும் வீட்டினிலே
மிக்குயர்வாம் மலைக் கோட்டினிலே -அருள்
மேவும் அகத்தியன் பாட்டினிலே (ஷண்முக)(3)

தொண்டர் திரண்டெழும் கூட்டத்திலே-அவர்
சுற்றிச் சுழன்றிடும் ஆட்டத்திலே
அண்டர் தினம் தொழும் வானத்திலே-தவ
ஆன்ம சுகம் பெரும் மோனத்திலே (ஷண்முக)(4)

ஏழைக்கிரங்கிடும் சித்தத்திலே-பொருள்
ஈந்து மகிழ்ந்தவர் அத்தத்திலே
ஊழைக் கடப்பவர் பக்தியிலே-தெய்வ
உண்மையைக் காண்பவர் சக்தியிலே (ஷண்முக)(5)

வேதாந்த தத்துவ ஸாரத்திலே-அலை
வீசும் செந்தூர்க் கடல் தீரத்திலே
ஆதார குண்டலி யோகத்திலே-பர
மாத்ம ஜீவாத்ம வைபோகத்திலே (ஷண்முக)(6)

அன்பர்க்கு இயற்றிடும் சேவையிலே-உயர்
அர்ச்சனையாய் மலர் தூவையிலே
இன்பப் பெரும்புனல் வீழ்ச்சியிலே-காணும்
யாவும் ஒன்றென்றுணர் காட்சியிலே (ஷண்முக)(7)

நண்ணும் இயற்கை அமைப்பினிலே-ஒளி
நட்சத்திரங்கள் இமைப்பினிலே
விண்ணில் விரிந்துள நீலத்திலே-மயில்
மேல்வரும் ஆனந்தக் கோலத்திலே (ஷண்முக)(8)

தேகவிசாரம் மறக்கையிலே-சிவ
ஜீவவிசாரம் பிறக்கையிலே
ஆகும் அருட்பணி செய்கையிலே_கங்கை
ஆறு கலந்திடும் பொய்கையிலே- (ஷண்முக)(9)

மானாபிமானம் விடுக்கையிலே- தீப
மங்கள ஜோதி எடுக்கையிலே
ஞானானுபூதி உதிக்கையிலே-குரு
நாதனை நாடித் துதிக்கையிலே (ஷண்முக)(10)


ஆடிவரும் நல்ல நாகத்திலே-அருள்
ஆறெழுத்தின் ஜெபவேகத்திலே
கோடிவரம் தரும் கோயிலிலே-தன்னைக்
கூப்பிடுவார் மனை வாயிலிலே (ஷண்முக)(11)

ஸித்தரின் ஞான விவேகத்திலே- பக்தர்
செய்திடும் தேனபிஷேகத்திலே
உத்தமமான விபூதியிலே-அதன்
உட்பொருளாம் சிவ ஜோதியிலே (ஷண்முக)(12)

அன்னைமடித்தலப் பிள்ளையவன்
சச்சிதானந்த நாட்டினுக் கெல்லையவன்
பண்ணும் ஏகாக்ஷர போதனவன்-மலர்ப்
பாதனவன் குருநாதனவன் (ஷண்முக)(13)

செல்வமெல்லாம்தரும் செல்வனவன் -அன்பர்
சிந்தைகவர்ந்திடும் கள்வனவன்
வெல்லும்செஞ்சேவல் பதாகை உயர்த்திய
வீரனவன் அலங்காரனவன் (ஷண்முக)(14)

சேர்ந்தவருக்கென்றும் சகாயனவன் -இன்பத்
தூயனவன் அன்பர் நேயனவன்
சேர்ந்தவரைத் துறந்தாண்டியுமாய் நின்ற
சீலனவன் வள்ளி லோலனவன் (ஷண்முக)(15)

அஞ்சுமுகத்தின் அருட்சுடரால்-வந்த
ஆறுமுகப் பெருமானுமவன்
விஞ்சிடும் அஞ்செழுத்தாறெழுத்தாய்-வந்த
விந்தைகொள் ஞானக்குழந்தையவன் (ஷண்முக)(16)

முத்தொழிலாற்றும் முதற்பொருளாம்--ஆதி
மூல சதாசிவ மூர்த்தியவன்
இத்தனி உண்மை மறந்தவனைச் -சிறை
இட்டவனாம் பின்னர் விட்டவனாம் (ஷண்முக)(17)

வள்ளி தெய்வானை மணாளனவன் -மண
மாலைகொள் ஆறிருதோளனவன்
அள்ளி அணைப்பவர் சொந்தமவன் - புகழ்
ஆகம நான்மறை அந்தமவன் (ஷண்முக)(18)

கோலமுடன் காலை மாலையிலும்-இரு
கோளங்கள் வானில் வரப்புரிவான்
ஓலையில் ஆணியை நாட்டுமுன்னே-எந்தன்
உள்ளத்திலே கவி ஊட்டிடுவான் (ஷண்முக)(19)

பேர்களெல்லாம் அவர் பேர்களன்றோ -சொல்லும்
பேதமெல்லாம் வெறும் வாதமன்றோ
சார்வதெல்லாம் அருள் என்றிருந்தால்-வினை
தாண்டிடலாம் உலகாண்டிடலாம் (ஷண்முக)(20)

கும்பமுனிக்கருள் நம்பியன் -அன்பு
கொண்ட கஜானனன் தம்பியவன்
தும்பை அணிந்தவன் கண்டு கண்டின்புறும்
ஜோதியவன் பரம் ஜோதியவன் (ஷண்முக)(21)

13 comments:

jeevagv May 09, 2009 5:48 PM  

அருமை+இனிமை யான பாடலை வழங்கியமைக்கு நன்றிகள் குமரன்!

குமரன் (Kumaran) May 09, 2009 8:47 PM  

மகிழ்ச்சி ஜீவா. நன்றிகளும்.

Kannabiran, Ravi Shankar (KRS) May 09, 2009 8:47 PM  

ஒலிச்சுட்டி இல்லையா குமரன்? கும்மிப் பாட்டு போல குதூகலமா இருக்கே?

//ஓலையில் ஆணியை நாட்டுமுன்னே-எந்தன்
உள்ளத்திலே கவி ஊட்டிடுவான்//

அனுபவத்தில் கண்ட உண்மை!

//பேர்களெல்லாம் அவர் பேர்களன்றோ -சொல்லும்
பேதமெல்லாம் வெறும் வாதமன்றோ
சார்வதெல்லாம் அருள் என்றிருந்தால்-வினை
தாண்டிடலாம் உலகாண்டிடலாம்//

நச்!

//கும்பமுனிக்கருள் நம்பியன்//

முருக நம்பிக்கு அடியேன் முத்தங்கள்! :)

தமிழ் May 09, 2009 9:02 PM  

பகிர்வுக்கு நன்றிங்க‌

குமரன் (Kumaran) May 09, 2009 9:05 PM  

தேடிப் பார்க்கிறேன் இரவி. ஒலிச்சுட்டி கிடைத்தால் சேர்க்கிறேன்.

இவ்வரிகள் மட்டுமின்றி ஒவ்வொரு வரியும் சந்தத்துடன் பாடும் போது மிகவும் இனிக்கும். பல முறை எங்கள் குழந்தைகளுக்குத் தாலாட்டாகவும் பாடியிருக்கிறேன். ஆமாம். கும்மிப்பாடலைத் தான் தாலாட்டாக மெதுவான சந்தத்தில் பாடுவேன். :-) ஒவ்வொரு சொல்லையும் சுவைக்க வேண்டும் இல்லையா?

குமரன் (Kumaran) May 09, 2009 9:06 PM  

மகிழ்ச்சி திகழ்மிளிர். நன்றிகளும்.

அடியார் May 09, 2009 10:15 PM  

அழகான பாடல்...

தங்கள் பதிவிற்கு நன்றி அன்பரே...

குமரன் (Kumaran) May 09, 2009 10:28 PM  

நன்றி அடியாரே.

lalitha May 10, 2009 9:11 AM  

pls... record it in ur own voice

S.Muruganandam May 10, 2009 10:52 AM  

//அஞ்சுமுகத்தின் அருட்சுடரால்-வந்த
ஆறுமுகப் பெருமானுமவன்
விஞ்சிடும் அஞ்செழுத்தாறெழுத்தாய்-வந்த
விந்தைகொள் ஞானக்குழந்தையவன்//

ஓம் சரவணபவ, ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

குமரன் (Kumaran) May 11, 2009 10:00 PM  

//pls... record it in ur own voice//

செய்யலாம் தான் லலிதா. ஆனால் இவ்வளவு பெரிய பாடலைப் பாடிப் பதிப்பதற்குத் தனியாக நேரம் ஒதுக்கிச் செய்ய வேண்டும். நேரம் கிடைக்கும் போது செய்கிறேன். நன்றி.

குமரன் (Kumaran) May 12, 2009 7:01 PM  

நன்றி கைலாஷி ஐயா.

Unknown September 22, 2020 7:56 PM  

Mphil ஆய்வில் இப் பாடலை பயன்படுத்த விரும்புகிறோம். இது அகத்தியர் பாடல் என்பதற்கான சான்று கிடைத்தால் உபயோகமாக இருக்கும் .

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP