Sunday, March 28, 2010

முருகனருள் 150: கவிக் காவடி!

அனைத்து முருகனடியார்களையும் அணைத்து,
இதோ, பங்குனி உத்திரம் அன்று.....முருகனருள் 150ஆம் பதிவு!

முருகனருள் வலைப்பூக் குழுவின் சார்பில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்!
இங்குள்ள முருகனடியார்கள் மட்டுமன்றி,
அடியவர், அடியவர் அல்லாதார் அனைவரையும் வணங்கி,
இந்தச் சிறப்புக் காவடிப் பதிவைத் துவங்கிடுவோம்!

ஒரு நூறு கடந்து,
இரு நூறு எதிர் கொள்ள,
இரு,நூறு என்று இடுகைகளை எண்ணி,

ஒரு நூறும், இரு நூறும்,
என்னில் அவன், முன் ஊற,
அவனில் நான், நான் ஊற,
ஐ நூறு, துயர் அறு நூறு,

ஒரு நூறும் + அரை நூறும்
திரு முருகன் திரு நீறே!
இன்று அவனின் திரு நூறே!




காவடிகளில் பல காவடிகள் உண்டு!
பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடியாம்! சந்தனக் காவடி, சர்க்கரைக் காவடி, மச்சக் காவடி, மயில் காவடி, சர்ப்பக் காவடி, பறவைக் காவடி, தூக்குக் காவடி என்று பல காவடிகள்!

ஆனால் கவிக் காவடி கேள்விப்பட்டு இருக்கீங்களா?
கவிதை எழுதி , இரண்டு பக்கமும் தொங்க விட்டு வரும் காவடியா? :)
இல்லையில்லை! இது கவி-நயா என்ற அக்கா எழுதிய கவி-காவடி!

இந்தக் காவடிச் சிந்தை, பல மாதங்களுக்கு முன்பே எழுதி, இங்கு பதிவிட அனுப்பி இருந்தார்!
ஆனால் என் நிலைமை என்ன நிலைமையோ, அப்போது விட்டுப் போனது!
விட்டுப் போனதை விட்டு விடுவானா என் முருகன்?
விட்டுப் போனதைத் தொட்டுக் கொண்டு விட்டான் இன்று!

இதோ கவிநயா அக்கா எழுதிய காவடிச் சிந்து, முருகனருள் வலைப்பூவின் 150ஆம் பதிவாக...
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! கவிதை வேல் முருகனுக்கு அரோகரா!



மீனா அவர்களின் குரலில்... கேட்டுக்கிட்டே படிங்க... நன்றி மீனா!

Murugan kavadi son...


குமரன் என்பது-அவன் பேரு - குன்று
தோறும் அவனது ஊரு - தன்னை
மன்றாடிடும் அடியார்களை, கண்போலவே காத்திடும் - அவன்
இறைவன் எங்கள் தலைவன்!

சூரனை வேலால் பிளந்தான் - கொண்டைச்
சேவற் கொடியோனாய்த் திகழ்ந்தான் - சக்தி
வேலன்-சிவ பாலன்-அவன், தேவர்-துயர் தூசாக்கிட
உதித்தான் அவ தரித்தான்!

மயில் மீதினில் ஏறியே வருவான் - அவன்
துயர்களைக் களைந்தெறிந் தருள்வான் - ஆறு
முகங்கொண்ட முருகன்-அவன், அழகன்-என மனங்-குழைந்திட
வருவான் இன்பம் தருவான்!


காவடி தூக்கியே ஆடு - அவன்
காலடி பணிந்தே பாடு - நம்
பாவங்களைக் பொடியாக்கிடும் தூயன்-அவன் திருவடிகளை
நாடு தினம் நாடு!

ஆறு படை வீடு பாரு - அது
ஆறு தலைத் தரும் கேளு - கந்தன்
சரவணபவ எனும்-மந்திரம் வினைகள்-களை திரு-மந்திரம்
கூறு நாளும் கூறு!

செந்தமிழ்க் காவலன் அவனே - நாமும்
சிந்தையில் கொள்ளுவோம் அவனை - சின்ன
முருகன்-அவன், அழகன்-அவன், குமரன்-அவன், கந்தன்-பதம்
பணிவோம் பணிந்து மகிழ்வோம்!!




வாழ்க்கையின் பாரத்தை...
இன்முகத்துடன், பாட்டமும், ஆட்டமுமாய்ச் சுமந்து விட்டால்.....பாரம் தெரியாது! பாசம் தெரிந்து விடும்! = இது தான் காவடி! எளிய மக்கள், மெத்தப் படித்த நமக்கு உணர்த்தும் பாடக் காவடியே பால் காவடி!

சரி, முதன் முதல்...காவடி எப்போ எடுத்தாங்க?
அந்தக் கதை........முருகனருள் - 100 ஆம் பதிவில் இருக்கு! இதோ!
முதல் காவடி எடுத்தது இடும்பன் தான்!
இது பற்றி புராணக் குறிப்புகள் தான் இருக்கே தவிர, இலக்கியக் குறிப்புகள் அவ்வளவா இல்லை!

* நாட்டு மக்கள், நம் கந்தனை, காலாற, காவடி எடுத்து வழிபடும் வழக்கம் பற்றி...
சங்க இலக்கியங்களில் காணவில்லை!
* பின் வந்த சிற்றிலக்கியங்களிலும் அவ்வளவாகக் காணவில்லை!
* சந்தம் செய்யவே பிறந்த நம் சொந்தக் கவியான அருணகிரியும், ஏனோ காவடிச் சிந்தில் போட்டாரில்லை!

பிற்கால இலக்கியங்களில் இல்லாவிட்டால், தமிழ்க் கடவுள் தான் இல்லையென்று ஆகி விடுமா? காவடி தான் இல்லையென்று ஆகி விடுமா?

பெரும்பாலும் பண்டைய நாட்களில் தல யாத்திரைக்கு எளிய கிராம மக்கள் நடந்து தான் போவாங்க! இன்னிக்கும் சில பேரு அப்படிப் பாத யாத்திரை போறாங்க!
அப்போ, வழியில் களைப்பு தெரியாம இருக்க பாடப்படும்/ஆடப்படும் பாடல் = வழிநடைச் சிந்து!
காவடியும் சேர்த்து வச்சிக்கிட்டு ஆடினால் = காவடிச் சிந்து!

கிராம மக்களே பாடுவதால், ரொம்ப கடினமான சொற் செட்டு எல்லாம் இல்லாமல் எளிமையாக இருக்கும்!
இதன் துள்ளல், மக்களிடையே மிகவும் பிரபலம் ஆகியது! பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இலக்கியங்களிலும் தலை தூக்க ஆரம்பித்தது! இசைக் கச்சேரிகளிலும் நுழைந்து கொண்டது!

தமிழ் இலக்கியத்துக்கு, எளியோரின் இந்த வழிநடைச் சிந்தை கொண்டு வந்தவர் கலியன் என்னும் திருமங்கை ஆழ்வார்! இது பற்றி இங்கே!
ஆனால், இது வழிநடைச் சிந்தாக இருந்ததே தவிர, காவடி ஆடும் சிந்தாக மாறவில்லை!

கடைசியில்...19ஆம் நூற்றாண்டு, சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்...
தெலுங்குக் குடும்பத்தில் பிறந்து,
தமிழ்க் கடவுளுக்கு உரித்தான காவடியை,
பாட்டுக்கும் மேடைக் கச்சேரிக்கும் கொண்டு வந்தவர்!

சென்னிக்குளம் முருகன், கழுகுமலை முருகன் - இவிங்க ரெண்டு பேர் மேலேயும் இவரு போட்ட காவடிச் சிந்துப் பாட்டுக்கள் எக்கச்சக்கம்! இன்னிக்கும் கச்சேரிகளில் காவடிச் சிந்து-ன்னா இவரு பாட்டு தான்!
அப்படியே ஊத்துக்காடு வேங்கட கவி, பாரதியார், பாபநாசம் சிவன் போன்றோரும் கொஞ்சம் கொஞ்சம் பாடி...இன்று புஷ்பவனம் குப்புசாமி வரை.......காவடி தொடர்கிறது!

ஈழம், சிங்கை, மலேயா, பர்மா, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்காவில் ராச்செஸ்டர், லண்டன், பாரீஸ்...இன்னும் பாரெல்லாம் பரவி ஆடுகிறது!


முருகனருள் வலைப்பூ...

பாடல்களுக்கான வலைப்பூ என்ற ஆரம்பப் பரிணாமத்தையும் தாண்டி,
* இலக்கியம், சமூகம், ஆய்வுகள்,
* புதிர் விளையாட்டுகள்,
* ஆலய நிகழ்வுகள்/தகவல்கள்,
* பொதுச் சேவைக்கான இடம்...(குழந்தைகள், முதியோர், மருத்துவம், கல்வி முனைப்புகள்-தொடர்புகள்)
என்று பலப்பல முகங் காட்டி இந்த முருகனருள் பரவ வேணும்!
- உங்கள் ஆலோசனைகளையும், வாழ்த்துக்களையும் தாருங்கள்!

முருகனருள் = பல்கிப் பெருகி, ஆயிரம் முகங்களாக மலர்ந்து, பல்லாண்டு பல்லாண்டு, அவன் அடியார்கள் கூடும் இடமாக இருக்க வேணும்!

இருநிலம் மீதினில்
எளியனும் வாழ
எனது முன் ஓடி வர வேணும்! முருகாஆஆஆ!



Reference: இதர காவடிப் பதிவுகள்:

முருகனருள் வலைப்பூவில்:
தைப்பூசம்: குத்துப் பாட்டு=கிளிக் கண்ணி+காவடிச் சிந்து!
கே.ஆர்.எஸ் பிறந்தநாள் முருகன் பாட்டு
100ஆம் பதிவு! பதிவர்கள் எடுக்கும் ஆறுபடைக் காவடிச் சிந்து!
வள்ளியைத் தொட்டு - காவடிச் சிந்து
காவடி ஆட்டமா! - காவடிச் சிந்து பாட்டமா!
காவடிச் சிந்தின் கதை!

கண்ணன் பாட்டு வலைப்பூவில்:
முருகனுக்கு மட்டுமா? கண்ணனுக்கும் காவடி எடுக்கறாங்க டோய்!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
கண்ணன் பிறந்தான்! எங்கள் மன்னன் பிறந்தான்!

29 comments:

Unknown March 29, 2010 1:05 AM  

காவடி ஆடி வந்தால் கந்தா என் மனம் உருகி கண்ணிர் வழிந்து ஒடுதே
குமரா ?
உன் காவடி வலை பதிவில் கவி நய நடை வடிவில் உள்ளம் பரவசமாகுதய்யா
ஐயா ..பரவசமாகுதய்யா .... முருகனருள் வலைபதிவுக்கு 150 வது நிறைவு நாள் உங்கள் நீண்ட பயண ம் நீடுழீ தொ டர மனமார்ந்த வாழ்த்துக்கள் ஓம் .................. சித்ரம்

Rajewh March 29, 2010 1:25 AM  

150 வது நிறைவு நாள் வாழ்த்துக்கள்
ஓம் முருகா!

தி. ரா. ச.(T.R.C.) March 29, 2010 3:07 AM  

முருகனருளின் 150ஆவது பதிவுக்கு நன்றி. சிறப்பாக அமைந்த பதிவு.பொன்மலர் நாற்றமுடைத்து என்பது போல கவிநயாவின் பாடல் பதிவுக்கு அழகு சேர்க்கிறது.படித்தவர்களுக்கும் பதிவு போட்டவர்களுக்கும் திருத்தணி முருகன் திருவருள் புரிவான் திருமால் மகிழ்ந்திடும் வள்ளி மணாளன்.

Rajan March 29, 2010 3:28 AM  

முருகா ! முருகா !

அப்பனே முருகா ஞான பண்டிதா ! சரணம் நின் திருவடிகள் ! (இப்பிடி தான் இனி கமென்ட் போடணும்னு முருகன் நேத்து கனவில் வந்து சொல்லிட்டு போனான் !)

Rajan March 29, 2010 3:30 AM  

نجوثثآ نكوممآننو فانفتح كامنة بتاء فقال دافوسار كيلينجيدوم جآككيراثاي ! قال يآروكيتت فيلآداريينجا تحافظى بينجيدوم قال

داي نآنلآم سيفانوككو سيلقى كوثثو فيتتافاندآ

Unknown March 29, 2010 4:21 AM  

உபாங்கமுடன் காவடி எடுத்து அன்பர்
போற்றி வேலரு பாதமே துதித்து
கைவேலு வட்டமிட் டாடச் - செந்தூர்க்
காவடிகள் இருகோடி சூழ்ந்து விளையாட
குயில்கூவ மயிலும் கூத்தாட - சாமி
குமரகுரு பரமுருக அரகர என்றாட
இரு கூறுவேன் உனதுடைய நாமம்
- எனக்குக்
குறையொன்று வாராமல் குமரநீ காப்பாய்
முருகன் - அருள்
நிதம் முருகன் - அருள்
கனியும் திரு மருகன்
பத்தர்கள் மிக வாழி! - நிதம்
படிப்போர் தினம் வாழி………………….. சித்ரம்

Test March 29, 2010 11:50 AM  

வாழ்த்துக்கள்....
அருமையான பாடல் மற்றும் பாடிய நயம்..

Kannabiran, Ravi Shankar (KRS) March 29, 2010 2:48 PM  

என்ன ராஜன்...
என் முருகனுக்கு அரபு மொழியில் எல்லாம் பின்னூட்டம் போட்டு இருக்கீக? என்ன அது-ன்னும் சொல்லிருங்க! :)

Kannabiran, Ravi Shankar (KRS) March 29, 2010 2:55 PM  

//முருகனருள் வலைபதிவுக்கு 150 வது நிறைவு நாள் உங்கள் நீண்ட பயண ம் நீடுழீ தொ டர மனமார்ந்த வாழ்த்துக்கள் ஓம்//

நன்றி சித்ரம் ஐயா!
முருகனருள் நீடுழித் தொடர வேண்டும்!
அடியேன் பயணம் முடிந்தாலும்...
இந்த முருகனருள் என்றும் நீங்காது இருந்து முருக மணங் கமழும்!

இந்த வலைப்பூ ஒரு வாடா வாசனை மலர்!
வாடா மலர் கொண்டு
நாடீர் நாள் தோறும்
பாடீர் திரு நாமம்!
வீடே பெற லாமே!

ஷைலஜா March 29, 2010 8:10 PM  

150க்கு வாழ்த்துகள்! பாடல் அருமை!

Kavinaya March 29, 2010 9:21 PM  

விட்டுப் போனதை அப்படியே விட்டு விடாமல் ச்செல்லக் குமரக் குழந்தை தொட்டுக் கொண்டதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி, கண்ணா! 150-க்குன்னு விட்டு வச்சிருந்தார் போல :) மீனாவின் குரலும், உங்கள் எழுத்தும், பாடலுக்கும் பதிவிற்கும் பன்மடங்கு அழகு சேர்க்கின்றன. மிகவும் நன்றி.

பாடலை ரசித்து பின்னூட்டிய, பின்னூட்டவிருக்கும் (ஆகா, எம்புட்டு நம்பிக்கை! :) அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

அறுமுகனின் திருப்பதங்கள் சரணம் சரணம்.

மன்னார்குடி March 30, 2010 5:12 AM  

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) March 30, 2010 11:19 AM  

பல முறை பாடிப் பழகிய கவிநயா அக்காவின் இந்தப் பாடல் 150வது இடுகையாகப் பதிவேறியதில் மிக்க மகிழ்ச்சி. நேரமின்மை காரணமாக இந்த இடுகை எழுத இயலவில்லை என்று அடியேன் சொன்னதால் இவ்விடுகையை எழுதி இட்ட கவிநயா அக்காவின் அன்புத் தம்பி கண்ணாவுக்கு நன்றி. அடியேன் எழுதியிருந்தால் இவ்வளவு நன்றாக வந்திருக்காது!

Kannabiran, Ravi Shankar (KRS) March 30, 2010 6:02 PM  

நன்றி ராஜேஷ்!
நன்றி லோகன்!
நன்றி ஷை-அக்கா!

Kannabiran, Ravi Shankar (KRS) March 30, 2010 6:07 PM  

//தி. ரா. ச.(T.R.C.) said...
முருகனருளின் 150ஆவது பதிவுக்கு நன்றி. சிறப்பாக அமைந்த பதிவு.பொன்மலர் நாற்றமுடைத்து என்பது போல கவிநயாவின் பாடல் பதிவுக்கு அழகு சேர்க்கிறது//

ஆமாம் திராச! தங்க மலருக்கு வாசனையும் சேர்ந்தா சொல்லவா வேணும்? கவி அக்காவின் எளிமையான வரிகள் + மீனாட்சி மேடம் அவர்களின் குரலில்...

அன்று விட்டுப் போனதை,
இன்று சேர்த்துக் கொண்டான்!
இன்று சேர்த்துக் கொண்டது போல் - எனை
என்று சேர்த்துக் கொள்வானோ!

Kannabiran, Ravi Shankar (KRS) March 30, 2010 6:14 PM  

//கவிநயா said...
விட்டுப் போனதை அப்படியே விட்டு விடாமல் ச்செல்லக் குமரக் குழந்தை தொட்டுக் கொண்டதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி, கண்ணா!//

அதுக்குத் தான் அந்தக் குழந்தை படம் போட்டேன்-க்கா, உங்களுக்குப் பிடிக்கும்-ன்னு!
பொதுவா முருகன் குழந்தையா இருக்குற படம் அவ்ளோவா இருக்காது! எல்லாமே பாலன், ஆண்டி-ன்னே துவங்கும்! :)

//150-க்குன்னு விட்டு வச்சிருந்தார் போல :)//

ஆமாம்! உங்க பதிவில் பாட்டைப் பாத்தவுடன்...அப்போ தான் ஞாபகமே வந்துச்சி!
அடடா...இப்படி விட்டுப் போச்சே-ன்னு ஒரு நிமிடம் கூட யோசிச்சி இருக்க மாட்டேன்...முருகனருள்-100க்கு Collage செய்த படம் கணினியில் தென்பட்டுச்சி! அப்போ ஆழி போல் மின்னித் தோனினது தான்...முருகனருள்-150!

//அறுமுகனின் திருப்பதங்கள் சரணம் சரணம்//

சரணம் சரணம் சரவண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) March 30, 2010 6:18 PM  

//மன்னார்குடி said...
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! வாழ்த்துக்கள்//

என்னடா யாருமே அரோகரா-ன்னு சொல்லலையே-ன்னு பார்த்தேன்! நீங்க வந்து சொல்லிட்டீங்க! :)

என்ன தான் முருகா-ன்னு சொன்னாலும், அது தனிமையில் காதலனைக் கொஞ்சுவது போல! :)
ஆனால் பப்ளிக்கா, அரோகரா-ன்னு சொல்லும் போது, அதுக்கு ஒரு தனி ஈர்ப்பு! :)

முருகனருள் முருகனுக்கு அரோகரா!

Kannabiran, Ravi Shankar (KRS) March 30, 2010 6:22 PM  

//குமரன் (Kumaran) said...
பல முறை பாடிப் பழகிய கவிநயா அக்காவின் இந்தப் பாடல் 150வது இடுகையாகப் பதிவேறியதில் மிக்க மகிழ்ச்சி//

Every landmark post happens to be a kavadi chinthu! கவனிச்சீங்களா? :)

//நேரமின்மை காரணமாக இந்த இடுகை எழுத இயலவில்லை என்று அடியேன் சொன்னதால்//

:)

//இவ்விடுகையை எழுதி இட்ட கவிநயா அக்காவின் அன்புத் தம்பி கண்ணாவுக்கு நன்றி//

உங்களுக்கும் "கண்ணா"-வா?
யார் இந்தக் "கண்ணா"-ன்னு ஒருவன் வந்து கேக்கப் போறான்! :)

//அடியேன் எழுதியிருந்தால் இவ்வளவு நன்றாக வந்திருக்காது!//

100% Correct! :)

Kannabiran, Ravi Shankar (KRS) March 30, 2010 6:24 PM  

//இவ்வளவு நன்றாக வந்திருக்காது!//

அவ்வளவு நன்றாக வந்திருக்கும்!
அவ்வளவு நன்றாக வந்திருக்கும்!

Kannabiran, Ravi Shankar (KRS) March 30, 2010 6:28 PM  

ஆனா இந்த இடுகைக்குச் சொந்தக்காரர் என்னவோ நீங்க தான் குமரன் அண்ணா!

சுந்தரனிடம் வந்து சொந்தக்காரன்-ன்னு சொல்லியும் இவரு ஒத்துக்கலையாமே!
அப்பறம் வழக்கு உளதே-ன்னு சொன்னாராமே என் பேர் கொண்ட ஒருத்தரு! அது போல உமக்கும் எமக்கும் இந்த விடயத்தில் வழக்கு உளதே! :))

முருகா, முருகனருள்-200 விரைவில் வருவதாகுக!

குமரன் (Kumaran) March 31, 2010 8:50 AM  

பதிவுக்குச் சொந்தக்காரர் யாருன்னு நாம வேணும்னா மறக்கலாம் இரவி! ஆனால் பதிவுக்குச் சொந்தக்காரர்கள் மறப்பதில்லை! அவர்கள் முருகனும், நாமக்கல்லாரும் தான்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) March 31, 2010 10:26 AM  

//அவர்கள் முருகனும், நாமக்கல்லாரும் தான்! :-)//

அதுக்கு தான்
//இந்த இடுகைக்குச் சொந்தக்காரர் என்னவோ நீங்க தான் குமரன் அண்ணா!//-ன்னு சொன்னேன்! நோ நோ...சொல்ல வச்சான்...முருகன்!
பாருங்க...
பதிவுக்கு நாமக்கல்லார்!
இந்த இடுகைக்கு நீங்க!
சரி தானே! :)

Rajewh April 03, 2010 3:45 AM  

காவடிகளில் பல காவடிகள் உண்டு!
பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடியாம்! சந்தனக் காவடி, சர்க்கரைக் காவடி, மச்சக் காவடி, மயில் காவடி, சர்ப்பக் காவடி, பறவைக் காவடி, தூக்குக் காவடி என்று பல காவடிகள்!:)))))




அழகிய உடல்மேல் சாம்பலைப் பூசி
அருவருப் பாக்கலும், மகளிர்
கொழுவிய குழலை மொட்டையாய் மழித்துக்
குரங்கெனத் தோன்றலும், அறியா
மழலையர் கையிலுட் காவடி கொடுத்து
மலையின் மேல் ஏற்றலும், இவைதாம்
வழிபடு முறையோ? இதுகொலோ சமயம்?
மடமைகண் டிரங்குமென் நெஞ்சே. 4

மூட பக்தி எவை என்று தடங்கண் சித்தர் பாடிய 11 பாடல்களில் 4- ஆம் பாடலில் இவை
இருக்கிறது



Source:----
http://gnanamethavam.blogspot.com/


காவடியை பற்றியும் சித்தர் இப்படி சொல்கிறார்.
அதை நான் மறுக்கிறேன்.
சித்தர் என் இப்படி சொல்கிறார்.
தெரிந்த அன்பர்கள் பதில் சொல்றீங்களா!

Kannabiran, Ravi Shankar (KRS) April 03, 2010 9:30 PM  

@ராஜேஷ்...
//அறியா மழலையர் கையிலுட் காவடி கொடுத்து
மலையின் மேல் ஏற்றலும், இவைதாம்
வழிபடு முறையோ? இதுகொலோ சமயம்?
மடமைகண் டிரங்குமென் நெஞ்சே//

ஹா ஹா ஹா
என்னைப் பொறுத்த வரை சித்தர் சொல்வது, சரி தான் ராஜேஷ்! :)
என்னடா பதிவில் காவடி பற்றிச் சொல்லிட்டு, இப்ப வேற மாதிரி சொல்றேனே-ன்னு பாக்கறீங்களா? :)

சித்தர் காவடி பற்றிச் சொன்னதை இன்னொருகா வாசிங்க!
"அறியா மழலையர் கையிலுட் காவடி கொடுத்து மலையின் மேல் ஏற்றலும்"

அதாச்சும் காவடி எடுப்பது என்பது உணர்ந்து எடுப்பது! சும்மா கும்மாளத்துக்கு அரையிருட்டில் டிஸ்கோ டான்ஸ் ஆடுவது அல்ல! :) ஆனா அதை வெறுமனே சடங்கு ஆக்கி விடும் போது தான் பிரச்சனை!

ஒன்னும் தெரியாக் குழந்தைகள் கையிலெல்லாம் காவடியைத் திணித்து, அதை எடுத்துக்கிட்டு வரச் சொல்வதைச் சித்தர் பார்த்து இருக்கிறார் போல! மதத்தில் மூழ்க்கி, சடங்கிலே அழுத்தி, பச்சிளம் பிள்ளைகளை அழுத்துவது என்பது கூடாது! அதைத் தான் சித்தர் பதிவு செய்கிறார்!

பெரியவர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களுக்காக காவடி எடுப்பார்கள் - அது வரை சரியே!
ஆனால் சில பிள்ளைகளுக்கு அதில் பிடிப்பே இருக்காது! இருந்தாலும் திணிக்கப்படும்! விதியே-ன்னு சுமந்து வரும் பசங்க! நானும் பார்த்திருக்கேன் எங்க கிராமத்துல :)

பிள்ளைக்கு குணமாகணுமே வேண்டிக்கிட்டா, தான் நேர்ந்துக்கணுமே ஒழிய பிள்ளையை அப்படிப் பண்றேன், இப்படிப் பண்ணறேன் என்று வேண்டிக் கொள்வதில் என்ன அன்பு இருக்கு? என் தோழனுக்கு குணமானால், அவனை ஒரு லட்சம் போட வைக்கறேன் என்பது போல் இருக்கு! :))

கூட வந்த குழந்தைகள் எல்லாம் பழனி மலை தொடர் வண்டியில் செல்ல...
பாவம் இந்தப் பிள்ளை மட்டும், பெரியவர்கள் என்னென்னமோ திணிக்க...விதியே-ன்னு, சுடு தரையில், காவடி தூக்கிட்டுச் செல்லும்...அதுக மூஞ்சியைப் பாக்கணுமே! அந்தக் குழந்தை இதுக்காகவே என் ஆருயிர் முருகனை வெறுக்கவும் துவங்கும்! :)

அதான் சித்தர் இப்படிப் பாடுகிறார்!
காவடியின் பாரத்தை நீ சுமந்து வா! சுமக்க வைக்காதே! - என்பதே பாடம்!

Rajewh April 05, 2010 1:19 AM  

மிக்க நன்றி KRS
சித்தர் சொல்வது சரிதான்!

Jayashree April 05, 2010 4:57 AM  

இப்பதான் பார்த்தேன்!! Mr KRS !!அட்டஹாஸம் தான்!!
"அறியா மழலை" குழந்தைகள் மட்டுமா!!:)))
அஞ்சு முகம் தோன்றின் ஆறு முகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் என்று வேல் தோன்றும்
நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன் !!

என்ன இது 150வது நிறைவு நாள்???

Kannabiran, Ravi Shankar (KRS) April 05, 2010 5:12 PM  

//Jayashree April 05, 2010 4:57 AM
இப்பதான் பார்த்தேன்!! Mr KRS !!அட்டஹாஸம் தான்!!
"அறியா மழலை" குழந்தைகள் மட்டுமா!!:)))//

hmmm...naanum thaan :)

aana yaar enna kaavadi en mela chumathinaalum, en muruganai-ai veRukka mudiyaathu, veRukka theriyaathu!
coz, enganam maRanthu vaazhven? Ezhaiyen, Ezhaiyene!

//என்ன இது 150வது நிறைவு நாள்???//

This is the 150th post in this Murugan Arul Blog, since the day of start (Sep-2006)!

We reached 100 in July-08!
After that a bit lull..Have to pick up speed, mayilaar thuNaiyudan :)

Jayashree April 06, 2010 5:33 AM  

சொக்கநாதர் பதிவுல புஷ்பம் பத்தி எழுதின COMMENT ஐ இப்பத்தான் பார்தேனப்பா. OF COURSE !! OF COURSE !! எவ்வளவு அழகா சொல்லி இருக்கிறர்கள் பெரியவர்கள் !! அஹிம்சா, இந்த்ரிய நிக்ரஹம், தயா, க்ஷமா, சாந்தி, த்யானம் , தபம் ,சத்யமெங்கற எட்டு புஷ்பார்ச்சனைக்கு ஈடு இணையே கிடயாதப்பா!! ம்... the key is to practice it!! I suppose. அந்த யோகத்தையும் திட சித்தத்தை தருபவன் என் குஹன், குருநாதன், அன்னையின் அன்பு மகன்:)) "சுற்றி நில்லாதே போ வினையே துள்ளி வருகுது வேல்" - எங்கள் மதிப்பிற்குறியவரும் ஆத்ம நண்பருமாகிய ஒரு மகானின் பாட்டு !!சின்ன வினைகளை ஒழித்து பரந்த உள்ளம் தந்து ஒளி வழங்குபவன் சக்தி வேலாயுதன் !! 150 ஓட நிறுத்திடாதீங்கோ. OLDER POST ஐ வீக் எண்ட் ல படிக்கிறேன்:))) வாழ்த்துக்கள்!!!

Unknown November 25, 2016 2:34 AM  

அரோகரா..

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP