Sunday, October 30, 2011

5) திருத்தணி: திருப்புகழ் "நெருப்பு"!

சஷ்டி: 5ஆம் நாள் & 6ஆம் நாள்! அடுத்து 7ஆம் அறிவா-ன்னு கேக்காதீக:)

இன்று பஞ்சமி-சஷ்டி இரண்டுமே வந்து விடுவதால்...பல தலங்களிலும் இன்றே கந்த சஷ்டி - சூர சங்காரம் ஆகி விடுகிறது!
வாங்க, ஓடுவோம்...இன்னிக்கி காலை-மாலை-ன்னு 2 பதிவாப் போடணும்! போடா, என்னை நீ ரொம்பவே படுத்தற, லூசு முருகவா!:)

திருத்தணிக்குத் தானே ஓடப் போறாம்? ஆமாம்!
ஆனா ஐந்தாம் படை வீடு அது மட்டுமே அல்ல! இன்னும் முருகனின் பல குன்றுகளும் சேர்த்தே 5ஆம் படைவீடு = குன்றுதோறாடல்!
பதி எங்கிலும் இருந்து விளையாடி
பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே!



இந்தத் திருப்புகழும் நாலே வரி தான்! அப்படியே கப்-ன்னு பிடிச்சிக்கோங்க!

சினத்தவர் முடிக்கும், பகைத்தவர் குடிக்கும்
செகுத்தவர் உயிர்க்கும்...சினமாகச்

சிரிப்பவர் தமக்கும், பழிப்பவர் தமக்கும்,
திருப்புகழ் நெருப்பென்(று)...அறிவோம் யாம்

நினைத்ததும் அளிக்கும், மனத்தையும் உருக்கும்
நிசிக்கரு அறுக்கும்...பிறவாமல்

நெருப்பையும் எரிக்கும், பொருப்பையும் இடிக்கும்
நிறைப்புகழ் உரைக்கும்...செயல் தாராய்!

சினத்தையும் உடற் சங்கரித்(து) அமலைமுற்றும்
சிரித்து எரி கொளுத்தும்...கதிர்வேலா

தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்து எண்
திருத்தணி இருக்கும்...பெருமாளே!!


பொருள்:
சினத்தவர் முடிக்கும், பகைத்தவர் குடிக்கும் = நல்ல அடியவர்களை.....சினப்போரை முடிக்கும், பகைப்போரைக் குடிக்கும்
செகுத்தவர் உயிர்க்கும்...சினமாக = கொல்வோரை அச்சினமே கொல்லும்!

சிரிப்பவர் தமக்கும், பழிப்பவர் தமக்கும் = நல்ல அடியவர்களை.....சிரித்து நகையாடுவோர் தமக்கும், பழித்துப் பகையாடுவோர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென்(று)...அறிவோம் யாம் = திருப்புகழே நெருப்பாய் மாறும்! அறிவோமாக!

நினைத்ததும் அளிக்கும், மனத்தையும் உருக்கும் = நல்ல அடியார்க்கு.....நினைத்ததை அளிக்கும், அவர்கள் மனத்தையும் உருக்கும்!
நிசிக்கரு அறுக்கும்...பிறவாமல் = நடுநிசி இருள் போல இருக்கும் கர்ப்ப வாசத்தை அறுக்கும்!

நெருப்பையும் எரிக்கும், பொருப்பையும் இடிக்கும் = நெருப்பையும் எரிக்கும்! மலையையும் உடைக்கும்!
நிறைப்புகழ் உரைக்கும்...செயல் தாராய்! = அப்படியான நிறைந்த உன் திருப்புகழைப் பாடும் செயல் தாராய்!

சினத்தையும் உடற் சங்கரித்(து) அமலைமுற்றும் = சினங் கொண்ட உடலை சங்காரம் செய்து, பல உடல் மாமிச மலைகளை
சிரித்து எரி கொளுத்தும்...கதிர்வேலா = ஒரு சிரிப்பினாலேயே கொளுத்த வல்ல கதிர்வேலா! நகை ஏவிய நாதா!

தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்து = தினைப்புனப் பெண், குறமகள், எங்கள் வள்ளியின் மார்பிலே அழுந்திச் சுகித்து இருக்கும் முருகவா...
எண் திருத்தணி இருக்கும்...பெருமாளே!! = நான் எண்ணுகின்ற திருத்தணி மலை மேவும் பெருமானே!




முன்பு பதிவிட்ட, திருத்தணி இரகசியங்கள்!

* மொதல்ல, திருத்தணிகை என்று தனியான ஒரு படைவீடே கிடையாது! குன்றுதோறாடல் என்பது தான் பொதுவான பெயர்.
இது "பல" குன்றுகளுக்குப் பொருந்தும். ஆனால் "எல்லாக்" குன்றுகளுக்கும் பொருந்தாது! :) பரங்கிமலை, சோளிங்கர் மலை, திருப்பதி மலை, சபரி மலை-ன்னு எல்லா மலைகளுக்கும் பொருந்தாது!:)

குன்று தோறு ஆடலில் ஒன்று தான் திருத்தணிகை!
திருத்தணிகை, திருச்செங்கோடு, வெள்ளிமலை, வள்ளிமலை, விராலிமலை என்று பல குன்று தோறும் ஆடல்! - எல்லாம் சேர்ந்து தான் ஐந்தாம் படைவீடு!
பதி எங்கிலும் இருந்து விளையாடி
"பல"குன்றிலும் அமர்ந்த பெருமாளே!


ஆனால் உபன்னியாசகர்களும், புலவர் பெருமக்களும், as usual, தணிகை மலையை மட்டும் வெகுவாகக் கொண்டாடி விட்டனர்.
நாளடைவில் அதையே புழங்கப் புழங்கத், திருத்தணிகை மட்டுமே ஐந்தாம் படை வீடு என்று மக்கள் மத்தியில் ஒரு தோற்றம் ஏற்பட்டு விட்டது!

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற சொலவடையும் அதே போலத் தான்!
குறிஞ்சிக் கடவுள் நம் முருகப் பெருமான்! மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி அல்லவா? அதனால் அப்படிச் சிறப்பிக்க வந்தார்கள்!
ஆனா நாமளோ, எங்கேனும் ஒரு குன்று இருக்கா? அப்படின்னா அங்கே குமரன் கோயிலும் இருந்தே ஆகணும்-ன்னு நினைச்சிக்கிட்டோம்! :)

திருமலை-திருப்பதி, சோளிங்கபுரம், அகோபிலம் (சிங்கவேள் குன்றம்), கொல்லூர் மூகாம்பிகை, சிருங்கேரி, வானமாமலை என்று அத்தனை குன்றுகளையும் அப்படி எடுத்துக் கொண்டால் சரியாக வருமா? சென்னைப் பரங்கிமலை மேலும் முருகப் பெருமான் என்று கிளம்ப முடியாதல்லவா? :)

குன்று தோறாடல் என்றால், குமரன் ஆடிய பல குன்றுகள் என்று தான் கொள்ள வேண்டும்! கிளிமஞ்சாரோ உட்பட உலகில் உள்ள எல்லாக் குன்றுகளிலும் ஆடினான் என்று பொருள் கொள்ளலாகாது! :)
பல குன்று தோறு ஆடல்களில், சிறப்பான ஒரு மலை, திருத் தணிகை மலை!


* திருத்தணிகை = பழத்துக்காகக் கோபித்துக் கொண்ட முருகன், சினம் தணிந்த இடம் என்று மட்டுமே பலரும் நினைத்துக் கொண்டுள்ளோம்!
ஆனால் அதை விட முக்கியமாக, வள்ளி அம்மையை முருகன் மணந்த தலமும் திருத்தணிகையே!

ஆனா, இதை ஏன் பெரிதாக யாரும் எடுத்துச் சொல்ல மாட்டாங்கிறாங்க-ன்னு தான் தெரியலை! :(

அருகில் உள்ள வள்ளிமலையில் காதல் புரிந்த முருகப் பெருமான்,
இங்கு வந்து தான்,
நம்பிராசனும் வேடுவர் குலமும் சூழ்ந்து இருந்து வாழ்த்த,
வள்ளியை, ஊரறிய, உலகறிய, மணம் புரிந்து கொண்டான்!

களவு மணமாவது? கற்பு மணமாவது?
களவில் தான் கற்பில்லையா? கற்பில் தான் களவில்லையா?
எல்லாம் ஒரே மணம் தான்! திரு-மணம் தான்! வள்ளித் திரு-மணம் தான்!
இனி வள்ளித் திருமணம் என்றாலே திருத்தணிகை தான் நம் நினைவுக்கு வர வேண்டும்! ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்!

வள்ளியம்மைக்குரிய விசேடச் சிறப்பை, அனைத்து முருகன் ஆலயங்களிலும், தெளிவாகத் தெரிசனப்படுத்த வேண்டும்!
சிவாலயங்களில் அம்பாளுக்குத் தரும் முன்னிறுத்தலைப் போலவே,
முருகாலயங்களில் வள்ளி-தேவானை அம்மைக்குத் தனியாக ஏற்றம் தர வேண்டும் என்பது அடியேன் நீண்ட நாள் அவா!



* அசுரர்களுடனான போரில், முருகனுக்கு ஏற்பட்ட கோபம், தணிந்த போன இடமும் இதுவே! தீமையைக் கண்டு பொங்கி எழுந்த பின், அந்தக் கோபம் மனதில் கனன்று கொண்டே இருக்கக் கூடாது அல்லவா!
இங்கு தான் அது தணிந்து, தணிகை மலை ஆனது! சாந்திபுரி என்றும் சொல்லிப் பார்த்தனர்! ஆனால் தணிகையே தனித்து நின்றது! வென்றது! :)

இராமனும் முருகனைப் போலவே, அரக்கர்களின் கொடுமையை எண்ணி மனத்தளவில் கனன்று கொண்டு இருந்தான். இராமேஸ்வரத்தில் அவன் வழிபட்ட போது, சிவபெருமானின் சொற்படி, தணிகை மலை வந்து முருகனையும் வழிபட்டான். பின்னரே இராமனின் கனன்ற கோபம் அகன்றது என்று தணிகை "ஸ்தல புராணம்" சொல்லுவார்கள்!

* இராமலிங்க வள்ளலார், கண்ணாடியில் ஜோதி காட்டி வழிபட்ட போது, அவரைத் தணிகை மலைக்கு அழைத்து, உருவத்திலும் அருவம் காட்டி அருளினான் முருகப் பெருமான்!
உருவாய் அருவாய், உளதாய் இலதாய் என்ற அநுபூதி வாக்கு சத்திய வாக்கு அல்லவா? அதனால் திருவருட்பாவில் தணிகை மலையானைப் போற்றிப் பாடுகிறார் வள்ளலார்!

* கர்நாடக இசை மும்மூர்த்திகளுள் ஒருவர் முத்துசாமி தீட்சிதர்! "குருகுஹ" என்றே தன்னுடைய பெயர் முத்திரையைத் தம் பாடல்களில் பதிப்பார். மிகுந்த முருக அன்பர்!
முதலில், இசையில் அவ்வளவாகத் தேர்ச்சி இல்லை அவருக்கு! தணிகை மலைப் படிகளில் அவர் தள்ளாடி வரும் போது, தணிகை வேலவன் வயசாளி உருவில் வந்து நின்றான்! தன் கோயில் பிரசாதத்தைத் தந்து, அவர் நாவினை இனிமை ஆக்கினான்!

அவர் முதல் கீர்த்தனையே திருத்தணி முருகப் பெருமான் மீது! - ஸ்ரீ நாதாதி குருகுஹோ, ஜயதி ஜயதி!
அருணகிரியைப் போலவே இவருக்கும் சந்தம், சலசலவென்று, சங்கீத ஸ்வரமாய்க் கொட்டும்! சந்தம் பாடணும்-ன்னாலே, அது சந்தச் சொந்தக்காரன், கந்தன் தான் தரணும் போல!

* திருத்தணியில் தான் ஆங்கிலப் புத்தாண்டுப் படி உற்சவம் பிரபலமானது! எல்லாரும் ஆங்கில மோகம் கொண்டு அலைகிறார்களே என்று பார்த்த வள்ளிமலை சுவாமிகள், சரியாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று, தமிழ்க் கடவுளுக்குப் படி உற்சவம் நடத்தி, அதைத் தமிழ் விழாவாக ஆக்கி விட்டார்!

* திருத்தணியும், திருப்பதி மாதிரியே ஆந்திராவுக்குப் போயிருக்க வேண்டியது!
மாநில எல்லைச் சீர்திருத்தம் (State Reorganization Act)-இன் படி சட்டம் கொண்டு வந்தது மத்திய அரசு! சிலம்புச் செல்வர் ம.பொ.சி தான் முன்னின்று திருத்தணியை மீட்டார்! "திருத்தணியை மீட்டேன்! திருப்பதியை மீட்பேன்!" என்று சூளுரைத்தார்! -ஆனால் முடியவில்லை!
ஒரு வேளை நல்லதற்காகக் கூட இருக்கலாம்! TTD என்று தனிப்பட்ட தன்னாட்சி நிறுவனம் அமையாது, கோயில் கொள்ளைகள் என்று பலவும் இங்கே மலிந்திருக்க வாய்ப்புண்டு!

* ஆசிரிய மாமணி, குடியரசுத் தலைவர், டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்ததும் திருத்தணியே!

* திருத்தணித் திருப்புகழ்களில், பிரபலமானவை சில:
- இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்,
- எத்தனை கலாதி,
- சினத்தவர் முடிக்கும்,
- அதிரும் கழல் (குன்று தோறாடல்)

திருத்தணி முருகப் பெருமானும்-தேவியரும்!
(மூலவர் வரைபடம், உற்சவர் புகைப்படம்)



* திருத்தணியில், முருகனுக்கு எதிராக மயில் அல்ல! யானை வாகனம் தான்! அதுவும் யானை, முருகனைப் பார்த்தபடி இல்லாமல், திரும்பிப் பார்த்தபடி இருக்கும்!
கருவறையில் மயில் இல்லாக் குறையைப் போக்க, உற்சவ முருகனுக்கு மிகப் பெரிய மயில் வாகனம் உண்டு!

* அறுபடை வீடுகளில், திருத்தணியில் மட்டுமே சூரசங்காரம் கிடையாது!
சினம் தணிந்த இடம் அல்லவா? எதுக்கு இன்னோரு முறை சங்காரம்?:))

புயற்பொழில் வயற்பதி
நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு பெருமாளே!
- முருகா!

3 comments:

பிரகாசம் October 31, 2011 2:31 AM  

பற்பல புதிய தகவல்கள் அளித்தமைக்கு நன்றி. இங்கு சூரசங்காரம் இல்லை என்பது இப்போதுதான் எனக்குத் தெரியும்

cheena (சீனா) November 06, 2011 12:45 AM  

அன்பின் கேயாரெஸ் - ஐந்தாம் படை வீடு திருத்தணி - அருமையான தகவல்கள் நிறைந்த இடுகை. பலப் பல தகவல்கள் - ஆனால் இது படை வீடே அல்ல - குன்று தோறாடல் எனப் பல குன்றுகள் சேர்ந்ததே 5, படை வீடு என ஒரு தகவல். தினைக்கிரி குறப்பெண்ணை மணந்த இடம் - அவள் மார்பினில் அழுந்திச் சுகித்த இடம் - குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக நினைக்கலாமா ? இயலாதே - பல மலைகளில் கும்ரனைக் காண முடியாது. பல பேர் பாடிய தலம். - நல்வாழ்த்துகள் கேயாரெஸ் - நட்புடன் சீனா

Godbless November 11, 2011 1:16 PM  

இரண்டு அழகர்களை சொல்வதாலோ என்னவோ வார்த்தைகளும் ரொம்ப அழகாகவே இருக்கிறது

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP