Monday, October 27, 2014

ஆடும் பரிதனில் ஆடி வருபவன்!

அனைவருக்கும் இனிய கந்த சஷ்டித் திருநாள் வாழ்த்துகள்!

 


சுப்பு தாத்தா அருமையாக அனுபவித்துப் பாடித் தந்ததைக் கேட்டுக் கொண்டே வாசியுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


("பாதி மதி நதி போது மணி சடை" என்ற திருப்புகழின் மெட்டில்...)


தான தனதன தான தனதன
தான தனதன… தனதான

ஆடும் பரிதனில் ஆடி வருகின்ற
வேடன் மருகனே…வடிவேலா
கூறும் அடியவர் குறைகள் தீர்த்திடும்
குறத்தி வள்ளியின்…மணவாளா

சூர பதுமனைக் கீறிப் பிளந்திட்டு
சுரபதிக் கருளிய…சுடர்வேலா
நாறும் எழில்மலர் சூடி மகிழ்ந்திடும்
தேவ யானையின்… மணவாளா

பூத கணத்தொடு சூழ வருகின்ற
வேத நாயகன்…திருமகனே
பாதச் சிலம்புகள் கீதம் இசைத்திட
பறந்து மயிலினில்…வாகுகனே

காதின் அணிகொண்டு வானின் மதிசெய்த
மாது சக்தியின்…மணிமகனே
நாதனுனை நம்பி நாளும் வணங்கிடும்
ஏழை அடியர்க்கு…அருள்குகனே


--கவிநயா


படத்துக்கு நன்றி: http://www.kaumaram.com/gallery/017.html
(படத்தைப் பெரிதுபடுத்திப் பாருங்கள்)

 

5 comments:

அம்பாளடியாள் October 28, 2014 2:34 AM  

வணக்கம் !

அருமை !அருமை ! அருமையான பாடல் வரிகள் என் தோழி
தங்களின் திறன் கண்டு வியக்கின்றேன் !சுப்புத் தாத்தாவின்
இனிய குரலில் கேட்ட இப் பாடலின் சந்தம் மனதை முழுமையாக
ஆட்கொண்டது !வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் இது
போன்ற பாடல்கள் தங்களின் சிந்தையில் ஒளிரட்டும் .மிக்க
நன்றி தோழி பகிர்வுக்கு .

Kavinaya October 28, 2014 9:35 AM  

அன்பினிய அம்பாளடியாள், பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி... சுப்பு தாத்தாவின் சார்பிலும். உங்களைப் போல் சரளமாகக் கவி வடிப்பவர்களைக் காண்பது கடினம். உங்கள் கவிதைகளைக் கண்டு எனக்கு எப்போதும் மிகுந்த வியப்பும் மதிப்பும் உண்டு. முருகனருள் பெருகட்டும்.

தினேஷ்குமார் October 28, 2014 10:11 AM  

அருமையான பாடல் முருகனின் திருவருள் நிறையட்டும் எங்கும்...

தேடும் விழிதனில் பாடி வருகின்றார்
நாடும் அருகிலே ... வடிவேலா

Kavinaya October 28, 2014 12:58 PM  

மிக்க நன்றி தினேஷ்குமார்!

Nanjil Siva January 02, 2020 10:11 AM  

தெம்மாங்கு இசையில் ஒரு பக்தி பரவசம் . அருமை கிளிக் ஜட்ஜ்மென்ட் .

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP